ஞாயிற்றுக் கிழமை. பலரும் சோம்பல் முறிக்கும் நாளாதலால் சாலையில் அதிகமான வாகனங்கள் இல்லை. கோலாலம்பூருக்கான பயணம் துரிதமாக அமைந்தது. காலை 11.30க்குள் கோலாலம்பூரை அடைந்துவிட்டேன். பத்து நிமிடத்தில் முரளி வருவதாக கூறினார். அவருக்காக காத்திருந்தேன்.
பல வண்ண பட்சிகள். ஹம்ம்ம் நிம்மதியாக கண்களுக்கு விருந்தளிக்க முடியாத குறை. பேருந்துச் சீட்டு வியாபாரிகளின் தொல்லை ஒரு பக்கம். விட்டால் வந்த பேருந்திலேயே மறுபடியும் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் போல. பாவம் அவர்களுக்கு என்ன தெரியும், வந்திறங்கியவனா இல்லை கிளம்பி போகிறவனா என்று. வயிற்று பிழைப்புக்காக கத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு இடமாக நின்றுக் கொண்டிருந்தேன். ஒருவன் அருகில் வந்தான்.
"அண்ணே எங்க போகனும் சொல்லுங்க 'டிக்கட்' எடுத்து கொடுக்கிறேன்" என்றான்.
நான் ஒன்றும் பேசாமல் இருந்தேன்.விட்டால் நீ என்னை எமலோகத்துக்கே அனுப்பி வைத்துவிடுவாய் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். போதை பித்தன் போல. அழுக்கு பிடித்து போன மேனி. (சித்தர்கள் கூட இப்படி தான் இருப்பாங்களாம் உண்மையா? :P).
"ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே. பத்து வெள்ளி இருந்தா கொடுங்க சாப்பிடனும் என்றான்".
கைகால் திடமாக தானே இருக்கு இவர்களுக்கு. உழைத்து உண்ண வலிக்கிறது. நிம்மதியாக மனிதன் ஒர் இடத்தில் நிற்கக் கூட முடியவில்லை. அவனைப் போலவே பலரும் அங்கே திரிகிறார்கள். மக்கள் நடமாடும் இடத்தில் இப்படிபட்டவர்கள் திரிவது எவ்வளவு ஆபத்து. 'புடு ராயா' பகுதியில் திருட்டு மற்றும் போதை பித்தர்கள் பிரச்சனை பலகாலமாக அறியப்பட்டது தான். இவற்றைக் களைய அரசாங்கம் ஏதும் திட்டங்கள் மேற்கொண்டதா என்பதும் கேள்விக்குறியே. அவனிடம் பேச்சு கொடுக்காமல் வேறு இடமாகச் சென்று நின்று கொண்டிருந்தேன்.
நண்பர் முரளி வந்தவுடன், முடிவிலான் எழுத்துக்கள் பதிவர் நண்பன் அனந்தனை தொடர்பு கொண்டேன். அவரின் தகவலின்படி இன்னும் 30 நிமிடங்களில் கோலாலம்பூரை அடைந்துவிடுவார் என அறிந்தோம். அனந்தன் பினாங்கில் வசிக்கும் பதிவர். அவர் வருகைக்குக் காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் மனோன்மணியம் புத்தக நிலையம் போய் வரலாம் என்றேன். பொடிநடையாக அவ்விடம் போனோம். கடைத் திறக்கவில்லை. மீண்டும் பேருந்து நிலையம் திரும்பினோம். சற்று நேரத்தில் அனந்தன் வந்தடைந்தார்.
அருகில் இருந்த கே.எஃப்.சி(KFC) திடீர் உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு சந்திப்பு இடத்திற்குக் கிளம்பினோம். அச்சமயம் கவிஞர் பிரான்சிஸ் அழைத்து தம் வருகையை உறுதிச் செய்தார். மதிய உணவின் போதே எங்களுக்குள் சிறு அறிமுகம் என சகஜமாக பேச ஆரம்பித்தோம்.
ஒரு மணிக்கு தொடர் வண்டி LRT? சேவையின் வழி பயணிக்க முடிவு செய்தோம். "ஏய் மச்சி அந்த 'கம்பார்ட்மெண்ட்ல' ஏறலாம் என்றார் முரளி. அங்கே இரு இந்திய பெண்கள் இருந்தார்கள். (ஹ்ம்ம் பய புள்ளைக்கு என்னா ஒரு ஆசை). அந்த 'கம்பார்ட்மெண்ட்' எங்களை கடந்து போகவும். எதிர் இருந்ததில் ஏறிக் கொண்டோம். அதன் பிறகு முரளி வருத்தப்பட்டாரா இல்லையா என்பதை அவரிடம் கேட்டுக் கொள்ளவும். வேண்டியோருக்கு தனிமடலில் அவரின் மின் மடல் முகவரி கொடுக்கப்படும்.
*********
தித்திவங்சாவில் இறங்கி சந்திப்பு இடத்தை நோக்கி நடந்தோம். சந்திப்பு இடத்தை சரியாக தேடி பிடிக்க தாவு தீர்ந்தது. இடத்தை தேர்ந்தெடுத்த புண்ணியவானுக்கு தொலைபேசி செய்தால் தொடர்பும் கிடைக்காமல் போனது. விசாரித்து பார்த்து சரியான இடத்தை அடைந்தோம். ஈரமான நினைவுகள் பதிவர் இனியவள் புனிதா தொடர்புக் கொண்டார். சரியான இடத்தில் காத்திருந்தார். இருந்தாலும் அது தான் சரியான இடமா என்பதில் அவருக்கு சந்தேகம்.
இடையே திருத்தமிழ் பதிவர் திரு.சுப நற்குணன் ஐயா தொடர்பு கொண்டு பேசினார். தன் வருகைத் திட்டம் தடைப்பட்டதால் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். வருகையாளர்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கும்படியும் கூறினார்.
கவிஞர் பிரான்சிஸ் எங்களுக்கு முன்னமே காத்திருந்தார். கவிஞர் ஏ.எஸ்.பிரான்சிஸ் 18க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 30 ஆண்டு காலமாக பத்திரிக்கை மற்றும் எழுத்துத் துறையில் பிரவேசித்து வருகிறார். 2000க்கும் மேற்பட்ட புது கவிதைகள் எழுதியுள்ளார். சமீபத்தில் கயல்விழி எனும் தலைப்பில் தமது வலைப்பதிவையும் தொடங்கியுள்ளார். அடுத்ததாக இரு நூல்கள் தயாரிப்பில் இருப்பதாகவும் சந்திப்பின் போது கூறினார்.
ஒர் இடமாக பார்த்து அமர்ந்தோம். சற்று நேரத்தில் அரங்கேற்றம் பதிவர் திரு மு.வேலன் மற்றும் கணைகள் பதிவர் பவனேஸ்வரியும் சந்திப்பு இடத்திற்கு வந்தடைந்தார்கள். திரு.மூர்த்தி(தாமதமாக கலந்து கொண்டார்), திரு.சண்முகம், திரு.குமரன் மாரிமுத்து, திரு.அ.நேசதுரை, மற்றும் வேலனின் நண்பர்(பெயர் மறதி மன்னிக்கவும்) சந்திப்பில் கலந்து கொண்ட பதிவு வாசகர்கள் மற்றும் எதிர்கால பதிவர்களுமாவர். சந்திப்பில் மொத்தம் 12 பேர் கலந்து கொண்டார்கள்.
********
(மூர்த்தி, ஆனந்தன், தெய்வ குழந்தை விக்கி, திரு.சண்முகம், கவிஞர் பிரான்சிஸ், திரு.நேசதுரை, திரு.குமரன்)
சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள்:
1) மலேசியாவில் பதிவர்களால் நிறைய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் மலேசிய தமிழ் வலைப்பதிவுலகில் அதிக வளர்ச்சியில்லை. மக்களிடையே அதன் குறைவான தாக்கத்திற்கு காரணம் என்ன?
முதலாவதாக மலேசிய தமிழர்களிடையே தமிழ் படிக்கும் ஆர்வம் குறைவாக இருப்பது காரணமாக அமைந்துள்ளது. அது போக புதிய/முக்கிய தகவல்கள் மலாய் மற்றும் ஆங்கில மொழியில் விரைவில் வெளிகாண்கிறது என்பதாலும். தமிழ் ஊடகம் விடுபட்டு போகிறது என்பதாக வாதங்களை முன் வைத்தனர்.
2) தமிழ் எழுத்துரு பிரச்சனை.
இங்கே பரவலான முறையில் தமிழ் எழுத்துரு செயல்பாடுகள் இல்லாமல் இருக்கிறது. சில தமிழ் மென்பொருள் கருவிகள் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இலவச மென்பொருள் பலரிடமும் அறிமுகமாகாமல் இருக்கிறது. (தேடல்கள் இல்லையோ?) சரியான முறையில் தமிழில் தட்டச்சு செய்ய பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்காள். சிலர் ஈ-கலப்பை மென்பொருளை பெற்றுக் கொண்டார்கள்.
3) இணைய தமிழ்.
இணையத்தில் தமிழ் இருப்பதே இன்னமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன? வீட்டில் கணினி இருந்தால் பிள்ளைகள் கெட்டுப் போகும் எனும் தவறான மனப்பான்மை அடிப்படையில் விதைக்கப்பட்டுவிட்ட பட்சத்தில் கணினி மற்றும் இணையத்தைவிட்டு இன்னமும் பலர் விலகியே இருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் இணைய தமிழ் அவர்களிடையே அன்னியமான ஒன்றுதான்.
தமிழ் பள்ளிகளில் கணினி வகுப்புகளும், தமிழ் மென்பொருள் வசதிகளும் இருப்பினும் தமிழ் ஆசிரியர்களிடையே அதன் பயன்பாடு எப்படி உள்ளது என்பது கேள்விக்குறியே. அதன் செயல்பாடுகள் நன்முறையில் பயன்படுத்தப்பட்டால் மலேசியாவில் மின்தமிழ் ஊடகத்தில் நன் அறிமுகத்தையும் மாற்றங்களையும் கொண்டுவர முடியும். 500 தமிழ்ப்பள்ளிகளில் வீதம் ஒரு ஆசிரியர் இருந்தாலே போதும். (இது என் கருத்து).
4) பதிவர் சஞ்சிகை.
வலைப்பதிவுகள் பரவலான முறையில் அறிமுகம் ஆகாமல் இருக்கும் பட்சத்தில். தமிழ் அச்சு, ஒலி மற்றும் ஒளி ஊடகங்களும் அதை மக்களிடையே அறிமுகப்படுத்தும் முயற்சிகள் ஏதும் இதுவரையிலும் எடுக்கப்பட்டதில்லை. இது அவர்களின் வியாபாரம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இருட்டடிப்பாக கூட இருக்கலாம். அல்லது இணைய ஊடகத்தின் பேரில் நம்பிக்கையோ/அக்கறையோ இல்லாத போக்காகவும் இருக்கலாம்.
பதிவர்களால் பதிவிடப்படும் நல்ல பதிவுகளை தேர்வு செய்து வருடத்திற்கு இரு முறை சஞ்சிகை வடிவில் வெளியிடும் திட்டம் முன் நிறுத்தப்பட்டது. சஞ்சிகை வெளியிடும் அளவிற்கு நம்மிடம் போதுமான பதிவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என புனிதா கூறினார். மேலும் பதிவர்கள் கூடும் பட்சத்தில் இதை செயலாக்கம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. அச்சு ஊடகத்தில் கவனம் செலுத்துவது நாம் பின்னோக்கிச் செல்கிறோம் என்பதை குறிப்பதாக முரளி கூறினார். சஞ்சிகையை மென் புத்தகமாக வெளியிடுவதே சிறந்ததாக கூறினார்.
சஞ்சிகை மின் புத்தகமாகவும் அச்சுவடிவிலும் வெளியிட தீர்வு செய்யப்பட்டது. அச்சுவடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை கொண்டு வருவது பலரிடையே மின்னூடகத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆவணமாக வைத்துக் கொள்ளவும் உதவும் என தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்பில் சஞ்சிகைக்கான வேளைகள் சமர்பிக்கப்படும்.
கூட்டுப்பதிவு, துறை சார்ந்த பதிவு, கருத்து சுதந்திரம் என பல விடயங்கள் மேலும் பேசப்பட்டன. அவற்றைப் பற்றிய தகவல்களை சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள் நிச்சயம் பதிவிடுவார்கள் என்பதை உறுதியோடு எதிர்ப்பார்க்கலாம்.
மேலும் பதிவு வாசகர்களுக்கு சில உதவித் தகவல்கள் வழங்கப்பட்டன. சில காலங்களில் அவர்கள் பதிவுலகில் பிரவேசிப்பார்கள் என எதிர்பார்ப்போம். 4 மணி அளவில் சந்திப்பு நிறைவு கண்டது.
*****
சந்திப்பில் கலந்துக் கொண்ட திரு.நேசதுரை அவர்கள் எங்களை அவர் வாகனத்தில் அழைத்துக் கொண்டார். மூர்த்தி அவருடைய நண்பர் மலேசிய பத்திரிக்கை ஒன்றில் பணியில் இருப்பதாகவும் அவரை சந்தித்துவிட்டுச் செல்லலாம் எனவும் கூறினார். நான், முரளி, அனந்தன், மூர்த்தி, மற்றும் திரு.நேசதுரை என ஐவரும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்குச் சென்றோம்.
வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதை பற்றிய கேள்வி எழுந்த போது அதன் முக்கிய நிர்வாகி பேசிய தகவல் 'காமிடியாக' இருந்தது. ஏதோ ஒரு படத்தில் வரும் ஆனா வாராது என வடிவேலுவிடம் நகைச்சுவை செய்வதை போல் பேசிக் கொண்டிருந்தார்.
அறிமுகம் செய்யலாம் பிரச்சனை இல்லை என்றார். பிறகு, இணைய தமிழால் அவர்கள் வியாபாரம் பாதிக்கும் என்றார். மீண்டும் அனுப்பி வையுங்கள் போடலாம் என்றார். (குப்பைத் தொட்டியிலோ?).
பத்திரிக்கைக்கு அனுப்பப்படும் எனது படைப்புகளை கண்டபடி துண்டாடிவிட்டு பிரசுரிக்கிறீர்களே எதனால் என்றேன். சர்சைக்குறிய விடயங்களை நீக்கிவிட்டுதான் வெளியிடுவோம் என்றார்.
சரி எதனால் ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியிடப்படுவதை அவரிடம் அறிவிக்க மறுக்கிறீர்கள் என்றேன். அப்படி அறிவித்தால் நீங்கள் அந்த திகதியில் மட்டும் பத்திரிக்கை வாங்குவீர்கள் மற்ற நாட்களில் எதிர்பார்த்து வாங்க மாட்டீர்கள் என்றார். (என்ன ஒரு அல்பத்தனமான பதில். முட்டிக் கொள்ள பக்கத்தில் சுவர் தான் இல்லை. உமிழ் நீரை விழுங்கிக் கொண்டேன்.) வாழ்க பத்திரிக்கை உலகம்.
நான் சென்ற ஆண்டு அனுப்பிய கட்டுரைகளையும் கதைகளையும் இந்த வருடம் தான் வெளியிட்டார்கள். அதையும் வெட்டி குத்தி குதறி வெளியிட்டார்கள். இப்போது அந்த பத்திரிக்கைக்கு என் படைப்புகள் எதையும் அனுப்புவதில்லை.
தமிழ் நாட்டில் வெளியாகும் தமிழ் ஓசை நாளிகையில் வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் வாய்ப்புக் கிடைத்ததும் அங்கு மட்டுமே படைப்புகளை அனுப்புகிறேன். படைப்பாளிக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை மகிழ்ச்சியையும் மேலும் எழுத உற்சாகமும் கொடுக்கிறது.
அடுத்தபடியாக ஜெயபக்தி புத்தக நிலையம் சென்றோம். அதிஷ்டவசமாக புத்தக விற்பனை சிறப்பு தள்ளுபடியில் இருந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அங்கே செலவானது. மலிவு விற்பனை அறிவிக்கப்படவில்லையா அல்லது அறிவிக்கப்பட்டும் இந்நிலையா என்பது தெரியவில்லை. நாங்கள் அங்கிருந்த ஒரு மணி நேரமும் அதிகமான வாடிக்கையாளர்களை காண முடியவில்லை.
நம்ம ஆட்சி என்பது போல், அங்கிருப்பவர்களை நையாண்டி செய்து கொண்டு புத்தகங்களை பார்வையிட்டோம். (ஆம், வெறுமனே நிற்கும் அவர்களுக்கும் பொழுது போகனும் இல்லையா).
நான் வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், பாலகுமாரனின் செப்புப் பட்டயம் மற்றும் மலாயா பல்கலைக்கழக பேரவைக் கதைகள் என மூன்று புத்தகங்கள் வாங்கினேன். அனந்தன், முரளி மற்றும் மூர்த்தியும் அவர்களுக்கு தே